செய்திகள்
கைது

அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2019-11-29 07:24 GMT   |   Update On 2019-11-29 07:24 GMT
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் பேசினார்.

இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று வெடிகுண்டு நிபுணர்களுடன் அறிவாலயத்தில் சோதனை நடத்தினர். அறிவாலய கட்டிடம் மற்றும் வளாகத்தில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு திரும்பிச் சென்றனர். மிரட்டல் விடுத்த வாலிபர் யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மிரட்டல் விடுத்தவரின் போன் நம்பரை வைத்து துப்பு துலக்கப்பட்டது.

விசாரணையில் கணேசன் என்ற வாலிபர் அண்ணா அறிவாலயத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தி.நகர் கண்ணம்மா பேட்டை பகுதியை சேர்ந்த அவரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணா அறிவாலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
Tags:    

Similar News