செய்திகள்
கோப்பு படம்

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை படுகொலை

Published On 2019-11-05 08:36 GMT   |   Update On 2019-11-05 08:36 GMT
சென்னை கண்ணகி நகரில் காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:

சென்னை பெரும்பாக்கம் சுனாமிகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் முரளி (28). இவர் காரப்பாக்கம் பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

செம்மஞ்சேரியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்னை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் திருமணத்துக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதை மீறி முரளியும், கவுசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர்.

முரளி காரப்பாக்கத்தில் உள்ள நிறுவனத்துக்கு இன்று வழக்கம்போல வேலைக்கு சென்றார். காலை 8.30 மணிஅளவில் அவர் அப்பகுதியில் உள்ள டீக் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் முரளியை சரமாரியாக வெட்டினார். இதில் அலறி துடித்த முரளி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

கொலை நடந்த இடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கு திரண்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கண்ணகி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரகுமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே புதுமாப்பிள்ளை முரளி கொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காதல் திருமணம் செய்தது பிடிக்காததால் முரளி ஆணவ கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை நடந்த இடத்தில் உள்ள கேமராக்களை போலீசார் போட்டுப்பார்த்தனர். அப்போது முரளியை கொலை செய்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வரும் காட்சி பதிவாகி உள்ளது.

அவர் ஹெல்மெட் அணிந்து இருப்பதால் முகம் தெரியவில்லை. மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இக்கொலை சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News