நெல்லை:
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 33 மில்லி மீட்டர் மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் பாளையில் அதிகபட்சமாக 32 மில்லி மீட்டரும், நெல்லையில் 29 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
நேற்று மாலை நெல்லை, பாளையில் கனமழை கொட்டியதால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் குறைந்த அளவே மழை பதிவாகி உள்ளது.
பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 1392 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இன்று காலை 133.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.19 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 231 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.90 அடியாக உயர்ந்துள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.