செய்திகள்
திருநாவுக்கரசு - சபரிராஜன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 2 பேர் மீதான ‘குண்டர் சட்டம்’ ரத்து

Published On 2019-11-01 07:54 GMT   |   Update On 2019-11-01 07:54 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று பலரை பாலியல் கொடுமைச் செய்து, அதை வீடியோ படம் எடுத்து ஒரு கும்பல் பணம் பறித்து வந்தது.

இதுகுறித்து கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் உள்பட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.



இந்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் இருவரையும் சிறையில் அடைத்த உத்தரவை அவர்களது குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை. பல ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது. குறைபாடுகளுடன் உள்ளது. எனவே, இவர்களை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News