செய்திகள்
விழுப்புரம்- கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (17-ந் தேதி) தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் நகர் பகுதியில் நேற்று விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை வெள்ளம் தேங்கி நின்றது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டே இருந்தது.
இதே போல திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, காணை, ஆயக்குடி, மாம்பழப்பட்டு, திருகோவிலூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீடித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் நகர் பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. நேற்று விடிய, விடிய கடலூர் நகர், முதுநகர், திருப்பாதிரிபுலியூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி, தூக்கனாம்பாக்கம், நடுவீரப்பட்டு, பாலூர், திருவந்திபுரம், பகுதியில் மழை பெய்து வருகிறது.
பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை, அண்ணாகிராமம் உள்ளிட்ட பகுதியிலும் மழை பெய்தது.
இது தவிர விருத்தாசலம், கம்மாபுரம், ஆலடி, மங்கலம்பேட்டை, ஊ.மங்கலம், திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை நீடித்தது. காலையிலும் மழை பெய்தது.
தற்போது நடவு பணிகள் தொடங்கி உள்ளது. மழையில் நனைந்தபடி விவசாயிகள் வயல்களில் நெல் நாற்றுகளை நட்டனர்.