செய்திகள்
நீட் தேர்வு

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு - மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம்

Published On 2019-09-27 02:57 GMT   |   Update On 2019-09-27 02:57 GMT
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து இருக்கும் அதிர்ச்சி தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தேனி:

சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மகன் உதித்சூர்யா (வயது19). இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.



ஆனால், மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி உதித்சூர்யா தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்ததுடன், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் சரண் அடையுமாறு அவருக்கு அறிவுறுத்தியது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் உதித்சூர்யா, அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன், தாயார் கயல்விழி ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் 3 பேரும் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் உதித்சூர்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். க.விலக்கு போலீசார் பதிவு செய்த ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், சென்னையில் இருந்து தேனி சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.40 மணியளவில் அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் முகத்தை துணியால் மூடியடி, போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு காட்வின்ஜெகதீஸ்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் தனித்தனியாகவும், ஒன்றாக வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பிற்பகல் 1.30 மணி அளவில் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு வந்தார். அவரும் உதித்சூர்யா மற்றும் அவருடைய பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். மாலை 6 மணி வரை இந்த விசாரணை நீடித்தது.

விசாரணைக்காக தேனி கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் உதித்சூர்யா சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடமும் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த ஆள்மாறாட்ட மோசடியில் உதித்சூர்யாவின் தாயார் கயல்விழிக்கு தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை வழக்கில் சேர்க்காமல் போலீசார் விடுவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர் உதித்சூர்யா, அவருடைய தந்தை வெங்கடேசன் இருவரையும் நேற்று இரவு 7 மணி அளவில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் கோர்ட்டு உத்தரவின்படி, அவர்கள் இருவரும் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித்சூர்யாவிடமும், அவருடைய தந்தை வெங்கடேசனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவரும் வாக்குமூலம் அளித்து உள்ளனர். ‘நீட்’ தேர்வு எழுத புரோக்கர் ஒருவரை வெங்கடேசன் நாடி உள்ளார். அந்த புரோக்கர் மூலமாகத்தான் வேறு ஒரு நபரை வைத்து தேர்வு எழுதி உள்ளனர்.

தேர்வு எழுதியது யார்? என்ற விவரம் தனக்கு தெரியவில்லை என்று உதித்சூர்யாவும், அவருடைய தந்தையும் தெரிவித்தனர். இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் பிடிபடும் போதுதான் உதித்சூர்யாவுக்கு பதிலாக தேர்வு எழுதியது யார்? என்பது தெரியவரும். அதேநேரத்தில் ‘ஹால்டிக்கெட்’டில் உள்ள புகைப்படத்தை வைத்து தேர்வு எழுதிய நபர் யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. அந்த புரோக்கர் கேரளாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.

இதுவரை நடத்திய விசாரணையில் மேலும், 5 பேர் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்து உள்ளது. அதன்பேரில், தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் விசாரணை நடத்த இருக்கிறோம். எனவே மேலும் சிலர் இதில் சிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலரிடம் வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணை நடத்தப்பட உள்ளது. உதித்சூர்யா வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய இடம் மும்பை என்பதால் மும்பைக்கும் சென்று விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News