செய்திகள்
காஜா உசேன்

பனியன் கம்பெனி உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-09-26 07:10 GMT   |   Update On 2019-09-26 07:10 GMT
திருப்பூரில் ஆர்டர் வராத விரக்தியால் பனியன் கம்பெனி உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் காங்கயம் ரோடு கோம்பய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 37). ராக்கியாபாளையம் பிரிவு அருகே லீசுக்கு எடுத்து பனியன் கம்பெனி நடத்தி வந்தார். சரியாக ஆர்டர்கள் வராததால் கடன் பிரச்சனைக்கு ஆளானார்.

இந்நிலையில் தீபாவளி நேரத்தில் ஆர்டர் கிடைக்கும் என நினைத்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் ஆர்டர்கள் ஏதும் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த காஜா உசேன் சோர்வாக காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பனியன் கம்பெனிக்கு வந்தார். பின்னர் வீடு திரும்பவில்லை. காஜா உசேன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவருக்கு போன் செய்தனர். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை.

இதனையடுத்து காஜா உசேனின் மனைவி மற்றும் உறவினர்கள் கம்பெனிக்கு வந்தனர். அங்கு காஜா உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News