செய்திகள்
பலியான சிறுவனையும், கல்குவாரி குட்டையையும் படத்தில் காணலாம்.

சேந்தமங்கலம் அருகே 9-ம் வகுப்பு மாணவர் குட்டையில் மூழ்கி பலி

Published On 2019-09-23 17:07 GMT   |   Update On 2019-09-23 17:07 GMT
சேந்தமங்கலம் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற 9-ம் வகுப்பு மாணவர் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், மேற்கு சின்னகுளத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களது ஒரே மகன் அரவிந்த் (வயது 14). இவர் சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துசாமி இறந்து விட்டார். இதனால் பாப்பாத்தி கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு, மகனை படிக்க வைத்து வந்தார்.

நேற்று விடுமுறை நாள் (ஞாயிற்றுக்கிழமை) என்பதால், அரவிந்த்தும், இவரது நண்பர்களும் மதியம் நேரத்தில் சேந்தமங்கலத்தை அடுத்த பச்சுளியாம்பட்டி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். பின்னர் அங்கு அவர்கள் கரையில் துணிகளை வைத்து விட்டு குட்டையில் இறங்கி நீச்சல் அடித்து குளித்தனர். மேலும் பாறையில் நின்று தண்ணீருக்குள் குதித்தும் விளையாடினர்.

அப்போது மாணவர் அரவிந்த் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். நடந்த சம்பவத்தை அவர்கள், அரவிந்தின் தாயாரிடம் தெரிவிக்கவில்லை. இதனால் தாய் பாப்பாத்தி, மகனை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி அலைந்தார். இரவு வெகுநேரமாக தேடினார்.

இந்த நிலையில் இன்று காலை கல் குவாரி குட்டை தண்ணீரில் அரவிந்த் உடல் மிதந்தது. இது குறித்து பாப்பாத்திக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். மேலும் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து குட்டையில் இருந்து அரவிந்த் உடலை மீட்டனர். கரையில் நின்ற அவரது தாய் பாப்பாத்தி, ஒரே மகனை பறி கொடுத்து விட்டேனே என உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் போலீசார், மாணவன் உடலை பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவன் இறந்த சம்பவம் மேற்கு சின்னகுளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News