செய்திகள்
கொலை

கலசப்பாக்கம் அருகே காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற வாலிபர்

Published On 2019-09-13 17:04 GMT   |   Update On 2019-09-13 17:04 GMT
செல்போன் பேச்சால் சந்தேகம் அடைந்த வாலிபர் காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கீழ்வன்னிய னூரை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 34). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள நகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது தன்னுடன் வேலைசெய்து வந்த செல்வி (வயது 33) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். அங்கு விவசாய வேலைகளை செய்து வந்தார். கணவன்-மனைவி 2 பேரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். 

அவர்களது குடும்பத்தில் செல்போன் ரூபத்தில் குழப்பம் வந்தது. செல்வி அடிக்கடி நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். சந்தேகமடைந்த திருவேங்கடம் செல்வியை கண்டித்தார். ஆனாலும் செல்போன் பேச்சு தொடர்ந்து நீடித்து வந்தது.

இது தொடர்பாக நள்ளிரவு ஒரு மணிக்கு திருவேங்கடத்திற்கும் செல்விக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த திருவேங்கடம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் கலசபாக்கம் போலீசில் திருவேங்கடம் சரண் அடைந்தார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியை வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கலசப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.    
Tags:    

Similar News