செய்திகள்
குழந்தை படுகொலை

சிவகிரியில் குழந்தை படுகொலை - உறவுக்கார பெண் கைது

Published On 2019-09-13 05:14 GMT   |   Update On 2019-09-13 05:14 GMT
சிவகிரியில் 2 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகிரி:

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கோவிலூர் (தென்மலை) பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 28) கூலி தொழிலாளி. இவரது மனைவி சக்திமாரி (24). இவர்களது மகள் காவினா (2). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தொழிலாளி பழனிச்சாமி (24). இவரது மனைவி முனீஸ்வரி (22). இவர்களுக்கு அன்புசெல்வம் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. பரமசிவமும், பழனிச்சாமியும் உறவினர்கள். காவினா தினமும் பழனிச்சாமி வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 9-ந் தேதி குழந்தை காவினா விளையாடுவதற்காக பக்கத்து வீட்டிற்கு சென்றுள்ளது. அப்போது பழனிச்சாமி வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் முனீஸ்வரி மற்றும் அவரது குழந்தை மட்டும் இருந்துள்ளனர். அப்போது குழந்தைகளை வைத்து தூக்கி செல்லும் சிறிய அளவிலான பெட்டில் படுத்தவாறு காவினா விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெட்டில் படுத்தவாறு காவினா மூச்சு திணறி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். இதையறிந்த பரமசிவம் உடனடியாக காவினாவை மீட்டு கரிவலம்வந்தநல்லூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை காவினா பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி காவினா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. இதில் குழந்தை காவினா பெட்டால் முகத்தை அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முனீஸ்வரி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை காவினாவை, முனீஸ்வரி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குழந்தை காவினா (பழையபடம்).

Tags:    

Similar News