செய்திகள்
வாலிபருக்கு சிகிச்சை அளித்த பிணவறை ஊழியர்.

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பிணவறை ஊழியர்

Published On 2019-09-12 04:50 GMT   |   Update On 2019-09-12 04:50 GMT
கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் காயமடைந்த வாலிபருக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானல் அருகே உள்ள மூஞ்சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் (வயது 36). இவர் தனது கையில் ஏற்பட்ட காயத்துக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தார். அப்போது ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை. 3 செவிலியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

கையில் காயத்துடன் ரபீக் அங்குள்ள அறையில் படுக்க வைக்கப்பட்டார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை ஊழியர் முனியாண்டி தானாக ரபீக்குக்கு சிகிச்சை அளித்து காயத்துக்கு தையல் போட்டார். சற்று மயக்க நிலையில் இருந்த ரபீக்குக்கு தனக்கு யார் சிகிச்சை அளிக்கிறார்கள்? என்றே தெரியவில்லை. இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இது குறித்து கொடைக்கானல் மருத்துவ அதிகாரி பாலாஜியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவ அதிகாரி பாலாஜி கூறுகையில், பிணவறை ஊழியர் முனியாண்டி வேலையை விட்டு நின்று பல வருடங்கள் ஆகிறது.

தற்போது அவர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியாகியுள்ளது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த சமயத்தில் பணியில் இருந்த 3 செவிலியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
Tags:    

Similar News