சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ்-அமைச்சர்கள் வாழ்த்து
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாள் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார்.
இன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடி தோரணங்களுடன் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.
அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், மகளிரணியினர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் விமான நிலையத்துக்கு வந்திருந்து வரவேற்றனர்.
தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், கே.சி. வீரமணி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் திரளாக வந்து வாழ்த்தினார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.எல்.ஏ. மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், கமலக்கண்ணன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள், மகளிரணியினர் திரளாக வந்திருந்து வரவேற்றனர்.