ராசிபுரம் அருகே துப்பாக்கி, ஆயுதங்களுடன் டிக்-டாக் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், நடிகர் தனுஷ் நடித்த மாரி சினிமா படத்தில் வரும் காட்சியை போல், துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது போல் டிக்-டாக் வீடியோ எடுத்து, வாட்ஸ்-அப் குரூப்பில் பரவவிட்டனர். இது வைரலாக பரவியது.
இதை பார்த்த பொதுமக்களுக்கு துப்பாக்கி எப்படி இந்த இளைஞர்களுக்கு கிடைத்தது? என பெரும் சந்தேகத்தை கிளப்பியது. இது போன்றவர்களால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து ராசிபுரம் போலீசார், டிக்-டாக் வீடியோவில் தெரிவித்த பெயரை கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் ராசிபுரம் வி.நகரை சேர்ந்த ராஜூ மகன் சுடர்மணி (வயது 21) என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார், அவரை கைது செய்தனர். இவர் கேட்டரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்வதும், விடுமுறையில் ஊருக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் டிக்-டாக் வீடியோவில் நடித்த 4 பேரை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.