செய்திகள்
சுற்றுலா பயணிகள் பரிசலில் அமர்ந்து ஒகேனக்கல் இயற்கை அழகை ரசித்த காட்சி

தொடர் விடுமுறை - ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2019-08-31 06:35 GMT   |   Update On 2019-08-31 06:35 GMT
தொடர் விடுமுறை காரணமாக இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மாற்றுபாதையில் இயக்கப்படும் பரிசலில் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்:

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து நேற்று 9800 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. மாலை 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கடந்த 8-ந் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்து உத்தரவிட்டது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைவானதால் கடந்த 25-ந் தேதி கோத்திக்கல் பாறையில் இருந்து ஊட்டமலை வரை மாற்று பாதையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உத்தரவிட்டது. இன்றும் தொடர்ந்து மாற்று பாதையில் பரிசல் இயக்கப்பட்டன.

தொடர் விடுமுறை காரணமாக இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மாற்றுபாதையில் இயக்கப்படும் பரிசலில் சவாரி சென்று மகிழ்ந்தனர்.

மேலும், சுற்றுலா பயணிகள் மீன்கடைகள், கடைவீதி பஜாரில் விற்பனை ஜோராக நடைபெற்றது. அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

ஆனால் வெள்ளப்பெருக்கின்போது மெயினருவி மற்றும் சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் சேதமடைந்து உள்ளதால் இன்று 24-வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Tags:    

Similar News