கோவையில் நகை பட்டறை ஊழியரிடம் 116 பவுன் நகை திருட்டு
கோவை:
கோவை வெரைட்டிஹாலை சேர்ந்தவர் அபினை (வயது 41). இவர் ராஜ வீதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். நகைகடைகள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்காக ஆர்டர் கொடுக்கும் நகைகளை கோவை மற்றும் தமிழகம் முழுவதும் செய்து கொடுப்பார்.
இவரது நகை கடையில் ரவிச்சந்திரன் என்பவர் ஊழியராக உள்ளார். சேலத்தில் உள்ள நகை கடைகளுக்கு நகைகளை ஊழியர் ரவிசந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்.
அவர் குறிப்பிட்ட நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்தார். விற்பனை செய்ததுபோக மீதமுள்ள 116 பவுன் நகையுடன் சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டார்.
கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் வந்தபோது நகை பையை சோதனை செய்தபோது 116 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து கடை உரிமையாளர் அபினைக்கு தெரிவித்தார். அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.