செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை (கோப்புப்படம்)

130 அடியை நெருங்கிய பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2019-08-12 04:14 GMT   |   Update On 2019-08-12 04:14 GMT
நீர் பிடிப்பில் தொடர் மழை காரணமாக பெரியாறு அணை நீர் மட்டம் 130 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு கடந்த 5 நாட்களாக அதிக அளவு நீர் வரத்து உள்ளது. 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு 3 முறை அணையின் நீர் மட்டம் 142 அடி வரை தேக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையினால் அணையின் நீர் மட்டம் 129.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,729 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4611 மில்லியன் கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் கூடுதல் தண்ணீர் வைகை அணை நீர் மட்டத்தை உயர்த்தி வருகிறது. இது தவிர வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் 71 அடி உயரமுள்ள வைகை அணையில் தற்போது 36.68 அடி தண்ணீர் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 739 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 709 மில்லியன் கன அடி.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள் கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் லோயர் கேம்ப், பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு தலா 42 மெகாவாட் வீதம் 126 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News