செய்திகள்
கைது செய்யப்பட்ட வீராசாமி

பெரியமேடு லாட்ஜில் ரெயில்வே பெண் ஊழியர் அடித்துக் கொலை- கள்ளக்காதலன் கைது

Published On 2019-08-11 10:23 GMT   |   Update On 2019-08-11 10:23 GMT
பெரியமேடு லாட்ஜில் வைத்து ரெயில்வே பெண் ஊழியரை அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை பெரியமேடு வி.வி.கோவில் தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று மதியம் கணவன்- மனைவி என்று கூறிக்கொண்டு 2 பேர் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று இரவு நீண்ட நேரமாக இவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இரவு 10.30 மணி அளவில் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மாற்று சாவியால் திறந்து உள்ளே சென்றனர். அங்கு லாட்ஜில் தங்கி இருந்த பெண் மட்டும் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடன் தங்கிய நபரை காணவில்லை.

இதுபற்றி உடனடியாக பெரியமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்லப்பா விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

இறந்துபோன பெண்ணின் முகத்தில் காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர் யார்? அவருடன் தங்கிய வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் மோகனா என்பது தெரிய வந்தது.

38 வயது ரெயில்வே ஊழியரான இவர் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் பணி புரிந்து வந்தார். ரெயிலுக்கு கொடிகாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். திருவொற்றியூர் ரெயில்வே குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தான் மோகனாவுக்கு, ரெயில்வே உணவகத்தில் பணியாற்றிய கடலூரை சேர்ந்த வீராசாமி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

திருவொற்றியூரில் உள்ள மோகனாவின் வீட்டுக்கு வீராசாமி அடிக்கடி செல்வதை வழக்கமாகவே வைத்திருந்தார். மோகனாவும், வீராசாமியும் கணவன்-மனைவி போலவே வாழ்ந்துவந்துள்ளனர். திருவொற்றியூரில் உள்ள வீட்டில் இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் மோகனாவின் வீட்டுக்கு வீராசாமி வருவதை கண்டித்துள்ளனர். இதனால் வெளியில் சென்று மோகனாவும், வீராசாமியும் சுற்றத் தொடங்கினர்.

நேற்று மதியம் இருவரும் ஒன்றாக வந்து பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தனர்.


மோகனாவின் நடவடிக்கைகளில் வீராசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு ஒருவருடன் அவருக்கு 3-வதாக தொடர்பு இருப்பதாக கருதினார். இதுபற்றி மோகனாவிடம் கேட்டார். அப்போதுதான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. வீராசாமியின் பேச்சை மோகனா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வீராசாமி மோகனாவின் முகத்தில் சரமாரியாக கையால் குத்தியதுடன், அறையில் வைத்து அடித்து உதைத்தார். மோகனாவின் உடலில் பல இடங்களில் சரமாரியாக எட்டி உதைத்தார். கடித்தும் வைத்தார்.

இதனால் நிலைகுலைந்த மோகனா வலி தாங்க முடியாமல் அலறியபடியே மயங்கி விழுந்தார். பின்னர் சிறுது நேரத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

பின்னர் மோகனா தற்கொலை செய்து கொண்டதுபோல நாடகமாட நினைத்த வீராசாமி மோகனாவின் கழுத்தில் சேலையால் இறுக்கி தூக்கில் தொங்கவிட்டார்.

பின்னர் பயந்துபோய் அறை கதவை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

மோகனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய கள்ளக்காதலன் வீராசாமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருவொற்றியூர் பகுதியில் பதுங்கி இருந்த வீராசாமியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கொலைசெய்யப்பட்ட மோகனாவின் சொந்த ஊர் திருத்தணி ஆகும். இவருக்கும் ரெயில்வேயில் பணிபுரிந்து வரும் ரூபேஸ் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 11 வயதில் மகளும், 6 மற்றும் 4 வயதில் 2 மகன்களும் உள்ளனர்.

கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மோகனா கணவனை விட்டு பிரிந்தார். இதன் பிறகு தான் மோகனா வீராசாமியுடன் பழகியுள்ளார்.

மோகனா திருவொற்றியூர் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் கணவர் ரூபேஸ் பொன்னேரியில் வசித்து வருகிறார். குழந்தைகள் 3 பேரும் அவருடனேயே வசித்து வருகிறார்கள்.

இதன் காரணமாகவே மோகனா திசைமாறிச் சென்று கள்ளக்காதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முடிவில் அதுவே அவருக்கு எமனாக மாறி உயிரையும் பறித்துவிட்டது.

லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரியமேடு பகுதியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான வீராசாமி, போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

மோகனா, கணவருக்கு துரோகம் செய்துவிட்டு எனக்கும் துரோகம் செய்தார். இதுபற்றி கேட்ட போது திமிராக பேசினார். செல்போனில் நீண்ட நேரம் பேசுவார். அதுவும் எனக்கு பிடிக்கவில்லை.

இதனால் என்னை விட்டு விட்டு வேறு யாருடனும் சென்றுவிடுவாளோ? என்று பயந்தேன். இதனால்லாட்ஜில் வைத்து கொலை செய்ய முடிவு செய்தேன். கழுத்தை நெரித்து, வேட்டியால் கழுத்தை இறுக்கினேன். பின்னர் சேலையால் கழுத்தை கட்டி தூக்கில் தொங்கவிட்டேன்.

இவ்வாறு வீராசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News