சவுக்கு சங்கர் மீதான வழக்கு: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டிடம் போலீசார் விசாரணை
- சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.
- பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கோவை:
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை தொடர்ந்து அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டார்.
பெலிக்ஸ் ஜெரால்டை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் நடந்தது.
இதற்காக பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சியில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி சரவண பாபு, யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டிடம் ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து போலீசார் பெலிக்ஸ் ஜெரால்டை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
சவுக்கு சங்கர் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். அவர் அளித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணைக்கு பின் இன்று மாலை 4 மணிக்கு பெலிக்ஸ் ஜெரால்ட் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.