செய்திகள்
காதல் ஜோடி

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனுடன் தஞ்சம் அடைந்த கல்லூரி மாணவி

Published On 2019-07-25 09:44 GMT   |   Update On 2019-07-25 09:44 GMT
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலுடன் கல்லூரி மாணவி தஞ்சம் அடைந்தார்.
குலசேகரம்:

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பெருவழிக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா பானு (வயது 19). இவர் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், குலசேகரம் காவஸ்தலம் பகுதியைச் சேர்ந்த மனாப் (27) என்பவரும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு ஆயிஷாபானு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலை ஆயிஷா பானு கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். மாலையில் அவர் தனது காதலன் மனாப்பை அழைத்துக் கொண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். தாங்கள் 2 பேரும் காதலிப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் வலியுறுத்தினர்.

அதன்பேரில் போலீசார் 2 பேருடைய உறவினர்களையும் நேரில் அழைத்து விசாரித்தனர். ஆயிஷாபானுவின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது தாயாரும், குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் ஆயிஷா பானுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுடன் வரும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். சுமார் 2 மணி நேரமாக ஆயிஷாபானுவின் தாயார் பாசப்போராட்டம் நடத்தினார். ஆனால் எதையும் ஆயிஷாபானு கேட்பதாக இல்லை. இதைத்தொடர்ந்து ஆயிஷாபானுவை அவரது காதலனுடன் செல்ல அனுமதித்தனர். அவரும் காதலனுடன் சென்றார்.
Tags:    

Similar News