செய்திகள் (Tamil News)
துப்பாக்கி சூடு

கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

Published On 2019-07-13 08:45 GMT   |   Update On 2019-07-13 08:45 GMT
பெரம்பலூர் அருகே இன்று காரில் கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து 180 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் மங்களமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர். ஆனால் கார் டிரைவர் நிறுத்தாமல் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தங்களது வாகனங்களில் காரை விரட்டி சென்றனர். இருப்பினும் காரில் சென்றவர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர். இதையடுத்து போலீசார் காரின் டயரில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. இதைத்தொடர்ந்து காரில் வந்த கும்பல், அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றனர்.

உடனே போலீசார் காரில் வந்த அனைவரையும் மடக்கி பிடித்தனர். மேலும் காரில் சோதனையிட்டனர். அப்போது காரில் சாக்குப்பைகளில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் துப்பாக்கிகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 180 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் மதுரையை சேர்ந்த படமுனியசாமி, வழிவிடு முருகன் என்பது தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர், அதனை எங்கு கொண்டு சென்றனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News