செய்திகள்
மரவள்ளி கிழங்கு

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-07-11 16:36 GMT   |   Update On 2019-07-11 16:36 GMT
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்து உள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:

பரமத்தி வேலூர் தாலுகாவில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் பரமத்தி வேலூர் பகுதியில் ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது இந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது.

இதேபோல சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையானது. அது இந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரம் வரை விற்பனையானது. மரவள்ளிக் கிழங்கு விலை உயர்ந்து உள்ளதால் மரவள்ளி பயிரிட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Tags:    

Similar News