திருவண்ணாமலையில் மேம்பால பணி நடைபெறும் இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது தாலுகா அலுவலகம் அருகே தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
அங்குள்ள ஹைமாஸ் விளக்கின் அடிபகுதியில் கொடுக்கபட்ட மின் இணைப்பு மூடி வைக்கவில்லை.
அதன் அருகில் உள்ள தியாகி அண்ணாமலை தெருவில் வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரகுநாத் (9). அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுவன் ரகுநாத் மேம்பால பணி நடந்து வரும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அருகே மணல் குவியலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது சறுக்கி விழுந்த அவன் ஹைமாஸ் விளக்கின் அடியில் இருந்த மின் இணைப்பை மிதித்து விட்டான். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதனைக்கண்ட சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் ஓடிவந்து சிறுவனை தூக்கி வைத்து கதறி அழுதனர்.
ஆத்திரமடைந்த அவர்கள் சிறுவனின் பிணத்துடன் பெரியார் சிலை அருகே சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டது. தாசில்தார் அமுல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரெயில்வே மேம்பால பணி நடக்கும் இடத்தில் பொதுமக்கள் செல்லமுடியாதபடி தடுப்புகள் வைக்கவில்லை. ஹைமாஸ் விளக்கில் மின்கசிவு சரிசெய்யாமல் இருந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடித்தது.
இதனால் திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது.