செய்திகள்
டிஜிபி சைலேந்திரபாபு

பழகுவதில் இனிமை, பணியில் நேர்மையை காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டும் - டிஜிபி சைலேந்திரபாபு

Published On 2019-07-06 06:10 GMT   |   Update On 2019-07-06 06:11 GMT
பழகுவதில் இனிமை, பணியில் நேர்மை என்பதை காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டும்என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

திருச்சி:

திருச்சியில் புதிதாக தேர்வான காவலர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பயிற்சி முடித்த காவலர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பேசியதாவது:-

லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாடு காவல்துறையில் சேர வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இதைப்பயன்படுத்தி நல்ல முறையில் பணியாற்றி காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

எந்த துறையிலும் பயிற்சி என்பது மிகவும் அவசியம். பயிற்சி இருந்தால் யாரும் விமானத்தை இயக்கலாம், விமானத்தில் இருந்து குதிக்கலாம், விண்வெளிக்கும் செல்லலாம். எனவே இங்கு எடுத்துக்கொண்ட அனைத்து பயிற்சிகளும் பணிக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காவல் துறையினர் பலரது தியாகத்தால் நற்பணிகளால் காவல்துறைக்கு கிடைத்துள்ள நல்ல பெயரை காப்பாற்ற வேண்டும். காவல் துறையினரின் நல்ல செயல்கள் காவல்துறைக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.

மக்களின் உயிர், உடைமை, உரிமைகளை காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும். இப்போது உள்ள உற்சாகத்துடனேயே பணிக்காலம் முழுவதும் செயல்பட்டு பணி நிறைவு பெற வேண்டும். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.பணி ஓய்வின் போது நல்ல உடல் நலனுடன் செல்ல வேண்டும்.

தினமும் ஒருவருக்காவது உதவி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. மக்களிடத்தில் இனிமையாக பேச வேண்டும். பழகுவதில் இனிமை, பணியில் நேர்மை என்பதை காவலர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News