செய்திகள்

மன்னார்குடி அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் சிறைவாசம்- பள்ளி ஆசிரியர் தற்கொலை

Published On 2019-06-26 12:05 GMT   |   Update On 2019-06-26 12:05 GMT
மன்னார்குடி அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் மன்னார்குடி அருகே கூன மடை கிராமத்தை சேர்ந்த ஹேமாஸ்ரீ (25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் நடத்தப்பட்டது.

இதன்பின்னர் இருவருக்கும் இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்று இளம்பெண் ஹேமா, மன்னார்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 28-ந் தேதி சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து சதீஷ்குமார் வெளியே வந்தார். பின்னர் மன்னார்குடி அருகே வேட்டைத்திடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

இதற்கிடையே காதலியால் சிறை சென்றதால் அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்டார். இதையடுத்து நேற்று மன்னார்குடி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் உறவினர் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் அவமானத்தால் விரக்தி அடைந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News