செய்திகள்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ள விசைபடகுகள்.

61 நாட்களுக்கு பின் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

Published On 2019-06-13 11:35 GMT   |   Update On 2019-06-13 11:35 GMT
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைவதால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் 67 விசைப்படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக உள்ளன. இந்த படகு உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளனர். அந்த படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மற்ற விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதனால் மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு செல்லும் வகையில் தங்கள் படகுகளில் உள்ள சிறு, சிறு பழுதுகளை நீக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அந்த பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முதல் வெள்ளோட்டம் பார்த்தனர். அதே போன்று வலைகளில் ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்தனர்.

இந்த வலை மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை மீனவர்கள் நேற்று முதல் விசைப்படகுகளில் ஏற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாளை மறுநாள் (15-ந் தேதி) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் மீன்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News