செய்திகள்

திண்டிவனத்தில் ஆம்னி பஸ் மோதி பெண் பலி

Published On 2019-05-02 05:48 GMT   |   Update On 2019-05-02 05:48 GMT
திண்டிவனத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்:

புதுவை வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவர் புதுவை மின்வாரிய அலுவலகத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாலதி (வயது 52). இவர்களது மகன் கேரள மாநிலம் எர்ணா குளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் மாலதி அவரது மகனை பார்ப்பதற்காக எர்ணாகுளம் செல்ல முடிவு செய்தார். அதற்காக ஒரு ஆம்னி பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.

அதன் பின்னர்நேற்று இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு மாலதி வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாலதி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News