செய்திகள்
கொலை செய்யப்பட்ட பாண்டியன்

பாடியில் தேமுதிக பிரமுகர் கொலையில் உறவினர் கோர்ட்டில் சரண்

Published On 2019-03-29 09:44 GMT   |   Update On 2019-03-29 09:44 GMT
பாடியில் தே.மு.தி.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த உறவினரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பூந்தமல்லி:

பாடி, சக்திநகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது45) தே.மு.தி.க.வில் பொறியியல் பிரிவில் மாநில இணைச் செயலாளராக இருந்தார். கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

நேற்று காலை அவர், 9-ம் வகுப்பு படிக்கும் மகனை அண்ணாநகரில் உள்ள பள்ளியில் இறக்கிவிட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பாடி, சீனிவாசன் நகர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மகும்பல் பாண்டியனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொன்றனர்.

இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கொலையில் தொடர்புடைய அமைந்தகரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவர் கொலையுண்ட பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

வினோத்குமாருக்கும், பாண்டியனுக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே குமரன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பை பெற்றதில் பாண்டியனிடம் பணம் இருந்துள்ளது.

இதனை அறிந்த வினோத் குமார் பணம் கேட்டு பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த மோதலில் கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வினோத்குமாரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
Tags:    

Similar News