செய்திகள்

ஜெயலலிதா மரண விசாரணை தாமதம்- சசிகலா வக்கீல் குற்றச்சாட்டு

Published On 2019-02-05 11:27 GMT   |   Update On 2019-02-05 11:27 GMT
ஜெயலலிதா மரண தொடர்பாக முதலில் வேகமாக சென்ற விசாரணை தற்போது தாமதம் ஆகி இருப்பதாக சசிகலா தரப்பு வக்கீல் குற்றம்சாட்டியுள்ளா. #JayaDeathProbe
சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இதில் சசிகலா உறவினர்கள், அப்பல்லோ டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட பலர் ஆஜராகினர். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

விசாரணை ஆணையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அன்று ஆஜராகவில்லை.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆவார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இது தொடர்பாக ஆணைய வட்டாரத்தில் கூறும்போது, “துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகும்படி சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை வக்கீல் ஆகியோர் ஆஜரானார்கள்.

பின்னர் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பினர் 29 டாக்டர்கள் கொண்ட குழுவை அமைத்து மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் ஏற்கனவே டாக்டர் குழு அமைத்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்தது. இதனால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர போவதாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனாலும், பட்ஜெட்டாலும் வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் வேகமாக சென்ற விசாரணை தற்போது தாமதம் ஆகி இருக்கிறது. தற்போது விசாரணை 21-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை ஆணையத்தின் காலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #JayaDeathProbe
Tags:    

Similar News