செய்திகள்

மதுரை கருப்பாயூரணியில் அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை

Published On 2018-12-11 10:11 GMT   |   Update On 2018-12-11 10:11 GMT
அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த புஷ்பா என்ற பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஜோசப்ராஜா தனது வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 36 பவுன் நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

அதில், நகை மாயமானது தொடர்பாக வேலைக்கார பெண் புஷ்பா மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனையூர் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் செந்தில்சேகரன் (34). ஐ.டி. அலுவலகத்தில் பணிபுரியும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் சத்தம் கேட்காத வகையில் பீரோவை திறந்த மர்ம நபர்கள் இதில் இருந்த 3 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News