செய்திகள்
மத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம்
மத்தூர் அருகே புளியமரத்தில் கார் மோதி 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஊத்தங்கரை:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த யஷ்வந்தபூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது31). இவர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (31), சரவணன் (28), ராமு (26), பிரதீபா(30), பாண்டியன் (26), அர்ஜுனன் (26), பாஸ்கர் (28), ஸ்டாலின் (26), தீனா (28) ஆகியோருடன் டாடா சுமோ காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தார். நேற்று திருமணம் முடிந்ததும் அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி செல்வதற்காக காரில் புறப்பட்டனர். காரை கோவிந்தராஜ் ஓட்டி வந்தார்.
அப்போது கார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கொடமாண்டபட்டி வந்தபோது ஒரு வளைவில் உள்ள புளிய மரத்தில் மோதியது. பின்னர் அந்த கார் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் கார் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 2 கார்களின் முன்புறமும் நொறுங்கியது. டாடா சுமோ காரில் வந்த கோவிந்தராஜ் உள்பட 8 பேரும் படுகாயம் அடைந்தனர். 2 பேருக்கு மட்டும் எந்த காயம் ஏற்பட வில்லை.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மத்தூர் போலீசார் உடனே அங்கு வந்து காயம் அடைந்தவர்களை மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஸ்டாலின் என்பவருக்கு கை முறிவு ஏற்பட்டதால் அவரை மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.