திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் தலை துண்டித்து பெண் கொலை - கணவர் வெறிச்செயல்
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள பேரையூர் போலீஸ் சரகத்துக்குட்பட்டது பெரிய பூலாம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பெத்தண்ணன் (வயது 69). இவருக்கு மாரியம்மாள் (60) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மகள் தந்தை வீட்டுக்கு வந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு பெத்தண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனைவியை எச்சரித்துள்ளார்.
சிறிது காலத்தில் இந்த பிரச்சினை பெரிதாகி பெத்தண்ணன்-மாரியம்மாளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மாரியம்மாள் கோபித்துக்கொண்டு மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று குடும்பத்தினர் சமரசம் பேசினர். இதையடுத்து மாரியம்மாள் கணவன் வீட்டுக்கு சென்றார். நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் சிறிது நேரம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு விட்டு தூங்கினர்.
ஆனாலும் மனைவி மீது ஆத்திரம் அடங்காத பெத்தண்ணன் அதி காலையில் எழுந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மாரியம்மாள் கழுத்தில் அரிவாளால் வெட்டினார். இதில் அவரது தலை துண்டானது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் சம்பவத்தன்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி பெத்தண்ணனை போலீசார் கைது செய்தனர்.