செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டுகிறது

Published On 2018-11-08 04:31 GMT   |   Update On 2018-11-08 04:31 GMT
மேட்டூர் அணை நீர்மட்டம் இந்த ஆண்டில் 2-வது முறையாக இன்று இரவு அல்லது நாளை காலை 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MetturDam
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று அணைக்கு 6 ஆயிரத்து 66 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை இது 6 ஆயிரத்து 144 கன அடியாக அதிகரித்து உள்ளது.

காவிரி டெல்டா பாசன பகுதியில மழை பெய்த காரணத்தால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

நேற்று காலை 99.42 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 99.74 அடியாக உயர்ந்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தொட உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டது.

தற்போது கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் மீண்டும் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்காக மொத்தம் 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. #MetturDam

Tags:    

Similar News