செய்திகள்

ராதாபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-10-16 05:27 GMT   |   Update On 2018-10-16 05:27 GMT
ராதாபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robbery

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது38). இவர் நாங்குநேரி அருகே உள்ள காடன்குளம் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி (30). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்களும் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் அவர்களின் வீட்டு முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்த பீரோவையும் உடைத்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.27 ஆயிரத்து 500 ஆகியவற்றையும் கொள்ளையடித்து கொண்டு ஓடி விட்டனர்.

நேற்று மாலை பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பிய முருகேசன், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகேசன் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவான ரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #Robbery

Tags:    

Similar News