பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி 10 ஆயிரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
பொன்னேரி:
பழவேற்காட்டை சுற்றி 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
பழவேற்காடு முகத்துவார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக மணல் மேடு உருவாகி உள்ளது. இந்த மணல் மேடுகளால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் நீர்-ஏரி நீர் சேருவதும் தடைபட்டு இருக்கிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மீனவர்கள் படகுகளில் மீன் பிடிக்க செல்ல முடியாத நிலை உருவானது. அவர்கள் கடந்த 10நாட்களுக்கு மேலாக மீன் பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து பழவேற்காடு, ஆரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றியுள்ள 100-க் கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று காலை படகுகளில் வந்து பழவேற்காடு முகத்துவாரத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களது கிராமங்களில் இருந்து கடல் வழியாக கருப்பு கொடியுடன் படகில் வந்தனர்.
முகத்துவார பகுதியை அடைந்ததும் அவர்கள் தூர்வாரக்கோரி கோஷ மிட்டனர். மேலும் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் வலியுத்தினர்.
அப்போது சில மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலுக்குள் இறங்கி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏராளமான மீனவர்கள் முகத்துவார பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மீனவ கிராம மக்களின் போராட்டத்தை அடுத்து பழவேற்காட்டை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.