கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - உதயகுமார் தகவல்
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சிறுகுறு வட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாவட்ட கல்வி அதிகாரி முருகேசன் தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் அம்மா, மாணவ-மாணவிகள் முன்னேற்றத்திற்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இலவச சைக்கிள், மடிக் கணினி உள்பட 14 வகையான உபகரணங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
அவரது ஆட்சியில் கல்விக்காக ஆண்டுக்கு ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது படிப்படியாக உயர்ந்து அம்மா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு இந்த ஆண்டு (2018-2019) ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசின் திட்டங்கள் சலுகைககளை மாணவ- மாணவிகள் உரியமுறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும். மாணவ சமுதாயம் நாட்டின் வருங்கால தூண்கள். நாட்டிற்கும், வீட்டிற்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ் நாடு ஒலிம்பிக் சங்க துணை தலைவர் சோலைராஜா, நீதிபதி எம்.எல்.ஏ., பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.