செய்திகள்

கேரள மாநிலத்தில் மழையால் பாதிப்பு: 10 லாரிகளில் நிவாரணப் பொருட்கள் - மதுரை கலெக்டர் அனுப்பி வைத்தார்

Published On 2018-08-18 12:11 GMT   |   Update On 2018-08-18 12:11 GMT
மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. #Keralasouthwestmonsoon #Keralarain

மதுரை:

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவின்றி தவிக்கிறார்கள்.

கேரள மக்களுக்கு உதவும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

காய்கறி மார்க்கெட்டில் இருந்து ஒரு லாரி லோடு காய்கறிகளும், வர்த்தக சங்கத்தின் சார்பில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும், செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் மருந்து பொருட்களும் சேகரிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டன.

அந்த லாரிகளை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து கேரள மாநிலத்துக்கு வழியனுப்பி வைத்தார். இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

ஏற்கனவே மதுரை மாநகராட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பியுள்ள நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News