செய்திகள்

ஓணம் பண்டிகை உற்சாகத்தை இழந்த கேரள மக்கள்

Published On 2018-08-13 10:39 GMT   |   Update On 2018-08-13 10:39 GMT
கன மழை நீடித்து வருவதால் ஓணம் பண்டிகை உற்சாகத்தை கேரள மக்கள் இழந்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் 22 அணைகள் நிரம்பி திறந்து விடப்பட்டுள்ளன. பல நகரங்கள் தண்ணீரில் மிதந்து வருகிறது. பல கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால் உணவு மற்றும் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தபோதிலும் இடைவிடாமல் மழை கொட்டி வருவதால் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை வரும் 25-ந் தேதி கொண்டாப்பட உள்ளது. ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அதன் உற்சாகம் தொடங்கி விடும். வெளியூர்களில் வசிக்கும் நபர்கள் 10 நாட்களுக்கு முன்பாகவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.

வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், பல்வேறு வகையான காய்கறிகள் கொண்டு விதவிதமான சமையல் செய்து உறவினர்களை வரவழைத்து ஆனந்தமாக கொண்டாடுவார்கள். மேலும் சுற்றுலா இடங்களுக்கும் சென்று வருவார்கள்.

ஆனால் தற்போது பெய்து வரும் கன மழையால் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்கவே பல நாட்கள் ஆகும் என்ற நிலையில் இயல்பு நிலைக்கு திரும்ப மேலும் தாமதமாகும். சேதம் அடைந்த பகுதிகளில் சாலைகள் சீரமைப்பு, மின் கம்பங்கள் சீரமைப்பு போன்றவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கிய பிறகுதான் பணிகள் தொடங்கும்.

இதனால் ஓணம் பண்டிகையை கொண்டாட தயார் நிலையில் இருந்த மக்கள் தற்போது வேதனையில் உள்ளனர். வெளியூர்களில் இருந்து கேரளாவிற்கு வர இயலாத அவர்கள் வெள்ள விபரங்களை கேட்டு மழை நின்றபிறகு ஊர் திரும்பும் எண்ணத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News