செய்திகள்

மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து - வசந்தராயர் மண்டப சீரமைப்புக்கு ராசிபுரம் குவாரி கற்கள்

Published On 2018-08-10 06:40 GMT   |   Update On 2018-08-10 06:40 GMT
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணிக்கு ராசி புரம் குவாரி கற்கள் பயன்படுத்தப்பட உள்ளது. #MaduraiMeenakshiTemple
மதுரை:

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:-

மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோவிலின் வீரவசந்தராயர் மண்படம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அதை மீண்டும் பழைய நிலையிலேயே புதுப்பித்து சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மண்டப சீரமைப்புக்கான கற்களை தேர்வு செய்வதற்கு தமிழகத்தின் 16 இடங்களில் உள்ள குவாரிகளில் மாதிரிக் கற்கள் சேகரிக்கப்பட்டு அவற்றின் உறுதித்தன்மை, ஆயுள் போன்றவற்றை அறிய சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பரிசோதனை முடிவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டிணம் எனும் இடத்தில் உள்ள குவாரி கற்களே தேர்வாகியுள்ளன. அங்கிருந்து மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மண்டபத்துக்கு தேவையான 1 லட்சம் கனஅடி கற்கள் எடுக்கப்படவுள்ளன.

அதில் சேதமடைந்தது போக 70 ஆயிரம் கன அடி கற்கள் பயன்படுத்தப்பட்டு மண்டபம் சீரமைக்கப்படும்.

பணிகள் தொடங்கி 2 ஆண்டுகளில் மண்டபம் சீரமைக்கப்பட்டு விடும். கோவிலின் பொற்றா மரைக்குளத்தின் தெற்கு பகுதி மண்டபம் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கிழக்கு பகுதி மண்டப சீரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. 2 மாதங்களில் பணிகள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #MaduraiMeenakshiTemple
Tags:    

Similar News