செய்திகள்

ஒகேனக்கல் மெயின் அருவியில் பழுதான தடுப்பு கம்பிகள் சீரமைக்கப்படுமா?

Published On 2018-08-06 05:08 GMT   |   Update On 2018-08-06 05:08 GMT
ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் வந்தபோது மெயின் அருவியில் சேதமடைந்த தடுப்பு கம்பிகள் சீரமைத்து சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அதில் இருந்து உபரி நீரை தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மாதம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தற்போது கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் சரிந்து 14 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

கடந்த மாதம் ஒகேனக்கல் அருவியில் வெள்ளம் வந்தபோது மெயின் அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்தது. இந்த கம்பிகளை உடனடியாக சீரமைத்து மெயின் அருவியில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இன்று 29-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், வழக்கமான பாதையில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆனால் மாற்று பாதையான கோத்திக்கல் பாறை வழியாக குறைந்த அளவில் பரிசல்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல தருமபுரி மாவட்டம் நாகமரை - சேலம் மாவட்டம் பண்ணவாடி இடையே பரிசல்களும், படகுகளும் கிராம மக்கள் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆற்றங்கரையோரம் மட்டும் குளித்து விட்டு செல்கின்றனர். அதேபோல மெயின் அருவிக்கு வரும் பாதையில் ஒரு சிறிய கால்வாயில் காவிரி ஆற்று நீர் வருகிறது. அந்த கால்வாயிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். #Hogenakkal #Cauvery

Tags:    

Similar News