செய்திகள்

சேலம் ஆர்.டி.ஓ.-புரோக்கர் அலுவலகங்களில் விடிய-விடிய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியது

Published On 2018-08-03 06:19 GMT   |   Update On 2018-08-03 06:19 GMT
சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் புரோக்கர் அலுவலகங்களில் விடிய-விடிய சோதனையில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியுள்ளது. #RTOoffice

சேலம்:

சேலம் உடையாப்பட்டியில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தில் புதிய லைசென்ஸ், வாகன தகுதி சான்று, லைசென்ஸ் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

உடனே அலுவலகத்தின் கேட்களை பூட்டிய அவர்கள் உள்ளே இருந்த புரோக்கர்கள், ஆர்.டி.ஓ. கதிரவன், ஆய்வாளர்கள் பதுவை நாதன், லோகநாதன் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கு நின்ற புரோக்கர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அலுவலக கேட்களை மூடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.

அப்போது அலுவலக நாற்காலி இடுக்குகள் மற்றும் அந்த அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத 2 லட்சம் சிக்கியது. லஞ்சம் பெற்றது தொடர்பாக சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் எப்போதும் புரோக்கர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நிற்பார்கள் என்பதால் அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி புரோக்கர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் உள்ள 3 அலுவலகங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புரோக்கர்கள் அலுவலங்களில் இருந்தும் 1 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 2-வது நாளாக இன்று காலையும் சோதனை நடந்து வருகிறது.

இதற்கிடையே ஆர்.டி.ஒ. கதிரவன் மற்றும் ஆய்வாளர்கள் லோகநாதன், பதுவைநாதன் மற்றும் புரோக்கர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News