செய்திகள்

ரோப்கார் பராமரிப்புக்காக ஜார்கண்டில் இருந்து பழனி வந்த இரும்பு வடக்கயிறு

Published On 2018-07-30 07:13 GMT   |   Update On 2018-07-30 07:13 GMT
பழனி ரோப்கார் பராமரிப்பு பணிக்காக ஜார்கண்டில் இருந்து புதிய இரும்பு வடக்கயிறு கொண்டு வரப்பட்டது. #PalaniTemple #RopeCar
பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதாக செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2 நிமிடத்தில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்லும் ரோப்காரையே பக்தர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி ரோப்கார் மாதத்துக்கு ஒரு நாளும் வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கடந்த 12-ந் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டது. மேல்தளம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள சக்கரங்கள் கழற்றப்பட்டு புதிய பேரிங் மற்றும் புஷ் மாற்றப்பட்டன.

மேலும் 70 அடி உயரத்தில் வடக்கயிறு பயணிக்கும் சக்கரங்களும், கழற்றி புதிய உதிரி பாகங்கள் மாற்றப்பட்டன. பக்தர்கள் அமர்ந்து பயணிக்கும் ரோப்கார் பெட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கைகள், கதவுகள், தாழ்ப்பாள்கள் ஆகியவை மாற்றப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்டது.

அவை ரோப்கார் நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தரம் உயர்த்தப்பட்ட ரோப்கார் பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட 750 மீட்டர் நீளமும் 34 மீட்டர் விட்டமும் கொண்ட வடக்கயிறை பொருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இப்பணி முடிவடைந்ததும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். #PalaniTemple #RopeCar

Tags:    

Similar News