செய்திகள்

அரூர் அருகே வாலிபர் கொலை

Published On 2018-07-14 04:36 GMT   |   Update On 2018-07-14 04:36 GMT
அரூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த மோபிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 35).

இவருக்கும் அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் (63), அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் இடையே அந்த பகுதியில் உள்ள ஏரியில் வீடு கட்ட இடம் பிடிப்பதில் நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.

அன்பரசன் அவ்வபோது குடித்து விட்டு வந்து வெள்ளையன் வீட்டுக்கு சென்று தகராறு செய்வாராம்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெள்ளையனின் மனைவி தமயந்தியை அன்பரசன் கொடுவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 மாதங்களுக்கு முன்பு தான் அன்பரசன் ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று மாலை 5.30 மணிக்கு இவர் மீண்டும் குடித்து விட்டு சென்று வெள்ளையனின் மருமகள் கவிதாவை கையை பிடித்து இழுத்து தகராறு செய்தார். இதை வெள்ளையன் அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

அவர்களிடம் இருந்து அன்பரசன் தப்பி ஓடினார். அவரை மோபிரிப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அருகே வைத்து வெள்ளையன் மற்றும் அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கினர்.

இதில் தலையில் அடிபட்ட அன்பரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கொலை செய்யப்பட்ட அன்பரசனின் உடல் இன்று அருர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த கொலை குறித்து அரூர் இன்ஸ்பெக்டர் பவுலேஷ் வழக்கு பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது மகன் சுரேஷ்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News