செய்திகள்

தீவிரமடையும் மழை - 125 அடியை எட்டிய பெரியாறு அணை நீர் மட்டம்

Published On 2018-07-12 04:42 GMT   |   Update On 2018-07-12 04:42 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பெரியாறு அணையின் நீர் மட்டம் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
கூடலூர்:

கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்திலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 122.30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 124.30 அடியாக உயர்ந்துள்ளது. 2 நாளில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல் நேற்று முன்தினம் 1929 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 3122 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1289 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3475 மில்லியன் கன அடியாக உள்ளது.

வைகை அணை நீர் மட்டம் 48.26 அடியாக உள்ளது. நீர் வரத்து 1030 கன அடி. திறப்பு 960 கன அடி. மஞ்சளாறு நீர் மட்டம் 42 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 123.18 அடியாகவும் உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக நெல்சாகுபடி நடந்து வருவதால் அணையின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து வருவது விவசாயிகளை ஆறுதலடைய வைத்துள்ளது. இடையில் மழை குறைந்து அணையின் நீர் மட்டம் சரிந்து வந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியாறு 28.4, தேக்கடி 21.8, கூடலூர் 10.7, உத்தமபாளையம் 4, சண்முகாநதி 5, மஞ்சளாறு 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News