பத்தினம்திட்டாவில் அரசு பஸ்-மினி லாரி நேருக்குநேர் மோதல் - 4 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து பத்தினம்திட்டாவுக்கு இன்று காலை 6 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
காலை 8.45 மணி அளவில் பஸ் பத்தினம்திட்டா அருகே மூலக்குழி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது பத்தினம்திட்டாவில் இருந்து ஆலப்புழா நோக்கி ஒரு மினி லாரி சென்றது.
எதிர்பாரதவிதமாக அரசு பஸ்சும், மினி லாரியும் நேருக்குநேராக பயங்கரமாக மோதின. இதில் மினி லாரியில் இருந்த பாபு, சஜீவ், ஆசாத், மற்றொரு பாபு ஆகிய 4 பேர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அரசு பஸ்சில் இருந்த 3 பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து செங்கனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்றனர். பலியான 4 பேர் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.