செய்திகள்

ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் பலி

Published On 2018-06-14 07:41 GMT   |   Update On 2018-06-14 07:47 GMT
ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident
ஊட்டி:

ஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.



அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து அலறிதுடித்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்தில் பஸ் உருக்குலைந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காயம் அடைந்த சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதையில் மண் உறுதிதன்மை இழந்து காணப்படுகிறது. எனவே வளைவு பாதையில் பஸ்சை திருப்பியபோது உறுதிதன்மை இல்லாத மண் சறுக்கி பஸ் பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை மெதுவாக இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #OotyAccident
Tags:    

Similar News