செய்திகள்

மாணவியை கடத்தி கற்பழித்த டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2018-04-21 11:17 GMT   |   Update On 2018-04-21 11:17 GMT
பள்ளியில் இருந்து கடத்திச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய மினிவேன் டிரைவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்:

வேலூர் சேண்பாக்கம் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் சதீஷ் என்கிற தயாளன் (வயது 27). மினிவேன் டிரைவர். இவர் அதேபகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவியை கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி பள்ளியில் இருந்து கடத்திச் சென்றுள்ளார். பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவர் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கேட்கவே, மினிவேன் டிரைவர் தயாளன் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் லட்சுமிபிரியா ஆஜரானார். வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட தயாளனுக்கு 3 பிரிவுகளின் கீழ் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும், இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அதாவது 10 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரை வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News