தேங்காய் திருட்டை தடுக்க தென்னை மரத்தில் மண்டை ஓடு-எலும்பை கட்டிய விவசாயி
மணப்பாறை:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள கொண்டையப்பட்டியில் முகமது கனி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.
விவசாயத்தை கண்ணாக நினைத்து பராமரித்து வரும் இந்த தென்னை மரங்களில் அதிகபட்ச காய்கள் காய்த்தன. தற்போதைய தேங்காய் விலை உயர்வால் முகமது கனிக்கு போதிய லாபம் கிடைத்து வாழ்வாதாரத்தையும் காத்து வந்தது.
இதனை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் முகமதுகனி, தோட்டத்தில் இல்லாத நேரத்தில் தேங்காய்களை திருடி சென்றனர். தோப்பிற்கு வரும் முகமது கனி சமீப காலமாக இந்த தேங்காய் திருட்டை தடுக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டார்.
பல நாட்கள் அங்கேயே காவல் இருந்து பார்த்தும் தேங்காய் திருடு போனது மட்டும் தொடர்ந்தது. தேங்காய் திருடர்களை மட்டும் கடைசிவரை பிடிக்க முடியாமல் போனது. தற்போது மார்க்கெட்டில் தேங்காய் நல்ல விலைக்கு போவதால், முகமது கனி இல்லாத நேரத்தில் தேங்காய் திருடு போவது தொடர்கதையாக இருந்தது.
பொறுத்தது போதும், இனியும் ஏமாறமாட்டேன் என்று உறுதி பூண்ட முகமது கனி ஒரு நூதன முறையை கையாண்டார். அதன்படி தோப்பில் உள்ள தென்னை மரத்தில் மண்டை ஓட்டையும், எலும்புகளையும் கட்டினார். தேங்காய் பறிக்க இரவில் வரும் மர்ம நபர்கள் இதனை கண்டு தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் என்று நம்பினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தபோதிலும் சிக்கலும் உருவானது.
தென்னந்தோப்பு வழியாக சென்ற பொது மக்கள் தென்னை மரத்தில் கட்டியிருந்த மண்டை ஓடு, எலும்புகளை பார்த்து பயந்து, அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அந்த வழியாக செல்லவே பயப்பட்டனர்.
இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் முகமது கனியிடம் தொடர்பு கொண்டு தென்னை மரத்தில் மண்டை ஓடு, எலும்புகள் கட்ட கூடாது, உடனே அதை அகற்றுங்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து முகமதுகனி மண்டை ஓட்டையும், எலும்புகளையும் அகற்றுவதாக கூறினார். இதனால் அந்த பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.
திருட்டை தடுக்க நூதன முறையில் தென்னை மரத்திற்கு மண்டைஓடு, எலும்புகள் கட்டியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியது. #tamilnews