செய்திகள்
செயின் பறித்தவரை துரத்திச் சென்ற சிறுவன் சூர்யாவுக்கு காவல் ஆணையர் பாராட்டு
சென்னை அண்ணாநகரில் பெண் மருத்துவரிடம் செயின் பறித்தவரை துரத்திச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் உள்ள அண்ணாநகரில் அமுதா என்ற மருத்துவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கிளினிக்கிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் வந்தார். முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு வந்த அவர், அமுதா கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினார்.
அமுதாவின் அலறல் சத்தம் கேட்டு தெருவில் நின்று கொண்டிருந்த சூர்யா என்ற சிறுவனும், அவரது நண்பரும் அந்த இளைஞரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில், அண்ணாநகரில் பெண் மருத்துவரிடம் செயின் பறித்தவரை துரத்திச் சென்று பிடித்த சிறுவன் சூர்யாவுக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், சிறுவன் சூர்யாவின் செயல் மற்றும் தைரியம், மன உறுதிக்கு பாராட்டு என்றார்.
இதுதொடர்பாக, சிறுவன் சூர்யா கூறுகையில், செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்றபோது, பொதுமக்கள் யாரும் உதவ எனக்கு முன்வரவில்லை என தெரிவித்துள்ளார். #Tamilnews