நத்தம் அருகே காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு மறியல்
செந்துறை:
நத்தம் அருகில் உள்ள ஆவிச்சிபட்டியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் கிடைக்க வில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று அங்குள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து வந்தனர்.
தற்போது அந்த தண்ணீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாய கிணறுகளில் தண்ணீர் தர மறுத்து வந்தனர்.
இதனால் பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் நத்தம் இன்ஸ்பெக்டர் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நத்தம்-சிறுகுடி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.