ஒத்தக்கடையில் கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை- தந்தை ஆத்திரம்
புதூர்:
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது அருமனூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கோபால் (வயது 51). இவருக்கு சுகன்யா (24) உள்பட 3 மகள்கள் உள்ளனர்.
சுகன்யாவிற்கும், மேலூர் தெற்குத்தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2 வயதில் குழந்தை உள்ளது.
சரவணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் சுகன்யா அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு வந்து செல்வார்.
நேற்று சுகன்யா விஷம் குடித்து தற்கொலை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில், சுகன்யாவின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
இது குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பெற்ற மகளை கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதன் பேரில் கோபாலை போலீசார் கைது செய்தனர்.
சுகன்யாவிற்கு மேலும் ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை கோபால் கண்டித்தும் அவர் கேட்கவில்லை.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கோபால் தெரிவித்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா விசாரணை நடத்தி வருகிறார்.